, ,

பயமூட்டும் மாரடைப்பு


மாரடைப்பு என்றால் என்ன?

மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? 


இந்த கேள்விகள் குறித்து எம் மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இதயத்தின் அழகிய துடிப்புகளே உயிருக்கு அடையாளம்.


துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் அறிகுறி.

துடிப்புகளின் மவுனம் அதுவே மரணம்.


இறைவனின் படைப்புகளில் ஓர் அற்புதத் தொழிற்சாலை



இருதயம் நெஞ்சறையினுள் இருக்கும், ஓர் நீர் இறைக்கும் இயந்திரம்போல் இரத்தத்தை “பம்” செய்யும் ஒரு உடல் உறுப்பாகும். உடம்பில் இருந்து எடுத்து வரப்பெறும் காபனீர் ஒக்க்சைடு நிறைந்த இரத்தத்தை சுவாசப் பைகளுக்கு அனுப்பி அங்கு ஒக்சிசன் ஏற்றப்பெற்று சுத்தமாகி திரும்ப இருதயத்திற்கு வரும் இரத்ததை, பம் செய்வதன் மூலம் இரத்தம் உடல் முழுக்க பாய்கின்றது, நீர் இறைக்கும் இயந்திரத்தை இயக்குவதற்கு மண்ணெண்ணை அல்லது பெற்றோல் தேவைப்படுவது போல் இரத்தத்தைப் பாச்சும் இருதயம் இயங்குவதற்கும் இரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்தும், ஒக்சிசனும் தேவைப் படுகின்றது. இவை கிடைக்காது விட்டால் இருதயம் பழுதடைந்து இயங்க மறுக்கின்றது,


இருதைய தசைகள், உயிர்வாழ்வதற்கும் அதன் செயல்பாட்டிற்கும் தேவையான ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்தினையும் இரத்தமூலம் பெறுகிறது. இருதயத்திற்கு இரத்தத்தினை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் அப் பகுதி தசைகள் (இறந்து) இயங்க மறுக்கின்றன. அதனால் இதயத்தில் வலிப்பு ஏற்படுகின்றது. இதுவே மாரடைப்பு அல்லது Heart Attack என அழைக்கப்பெறுகின்றது.


ஓயாது இயங்கும் இருதயத்தின் எல்லாத் தசைகளுக்கும் இருதயம் இயங்குவதற்கு தேவையான இரத்தம் மூன்று (Coronary-Artery) கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) மூலம் வினியோகிக்கப் பெறுகின்றது. இவ் இரத்தக் குளாய்கள் மேலும் பல சிறிய கிளைகளாக (நுண்ணிய) பிரிந்து இருதயத்தின் ஒவ்வொரு சிறிய பகுதிக்கும் (செல்களுக்கும்) இரத்ததை வழங்கி போஷிக்கின்றது. இவ் இரத்தத்தில் இருந்து தேவையான உணவையும் ஒக்ஷியினையும் இருதயம் பெறுகின்றது.


இருதயம் ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும். ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் எல்லாப் பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் ரத்தம் எடுத்து செல்லுகின்றன. இரத்தத்தை உடல்முழுக்க பாயச்செய்வதற்காகவே இருதயம் துடிக்கின்றது. இதயத் துடிப்பு நின்றுவிட்டால் இரத்தோட்டமும் நின்றுவிடுகின்றது. அதுவே மரணம்.


இந்த ரத்தக்குழாய்களில் ஏற்படும் தடைகளும், இரத்தக் குளாய்களின் சுருக்கங்களும் இரத்த ஓட்டத்தை தடை செய்து விடுகின்றன. சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இரத்தோட்டம் தடைபெற்ற பகுதிக்கு இரத்தம் செல்வது தடைபடுகின்றது. சக்தியைக் கொடுக்கும் இரத்தம் கிடையாதால் தசைகள் மரணிக்கின்றன். அப்போது இதயத்திற்கு வேதனை உண்டாகின்தறது. அதுவே இதைய வலி என அழைக்கின்றோம். இதுவே மாரடைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. மாரடைப்பின் தீவிரத் தன்மை இதயத்தசைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து அமைகிறது. இறந்த தசைகள் இதயத்தின் இரத்தம்செலுத்தும் (பம் செய்யும்) திறனைக் குறைத்து அதன் செயல்பாட்டினை வெகுவாக பாதிக்கலாம்.
இரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது?



இரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கும் இடையே, ஒருவர் பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய ஆரம்பிக்கின்றது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.



மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?


காரணங்கள் இரண்டு. 


* ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை


* மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை.


மாரடைப்பு வருவதற்கான காரணிகள்


* புகைப்பிடித்தல்


* சர்க்கரை நோய் 


* உயர் இரத்த அழுத்தம் 


* அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு (HDL) குறைவாக இருத்தல் 


* அதிக கொலஸ்ட்ரால் 


* உடல் உழைப்பு இல்லாமை 


* குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு 


* மன அழுத்தம், அதீத கோபம் மற்றும் படபடப்பு


* மரபியல் காரணிகள். 


கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் 

* புகை பிடித்தல், 

* உயர் ரத்தஅழுத்தம் 



* உடலின் எடை 


* உடற்பயிற்சியின்மை 


* சர்க்கரை நோய்.



கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் 

* வயது 


* பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை.


இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.




மாரடைப்பு யாரைத் தாக்கும்?


உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.


மாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது.


இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படும் அறிகுறிகளாவன:


நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது; 


அதிக வியர்வை; 


நெஞ்சு இறுக்கம்; 


மூச்சுத் திணறல்; 


இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல் போன்றவை.


ஆண்களுக்குப் பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவதுபோல் தோன்றும். பெண்களுக்கு மூச்சுத் திணறல், மேல்வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும்.


அறிகுறிகளைத் தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம். இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.


பரிசோதனைகளைச் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம்.


எனவே நெஞ்சுவலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பு என்று தவறாக நினைத்து வருந்தத் தேவையில்லை.


மாரடைப்பின் அறிகுறிகள்?


மாரடைப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை ஒத்திருக்கலாம்.


பொதுவான அறிகுறிகள்


* நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம். 


* வியர்த்தல், குமட்டல் மற்றும் மயக்கம் வருவதுபோல் உணர்தல். 


* மார்பின் முன்பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம். இங்கிருந்து வலி கழுத்து அல்லது இடக்கைக்கு பரவலாம். 


* வாந்தி, இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.


* தீவிர நிலையில், இரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து இறப்பும் நேரலாம்.


மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம்.


சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி, அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு “அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.


இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்:


பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.


சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம்.


பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம்.


அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும். இதற்கு “ஆஞ்சைனா’ என்று பெயர்.


நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி. மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.



0 கருத்துகள்: