, ,

கொலம்பஸ்

இந்தியாவுக்கு கடல் மார்க்கமாகப் புதிய வழி கண்டுபிடிக்க முயன்று அமெரிக்காவை கண்டுபிடித்தவர், என்று வரலாற்றில் புகழ் பெற்றவர், கொலம்பஸ். அமெரிக்காவை கண்டு பிடித்தவர் கொலம்பஸ் என்று பொதுவாக கூறப்பட்டாலும் அவர் உண்மையில் கண்டுபிடித்தவை, சில தீவுகளையே. எனினும் கொலம்பஸ் இந்தத் தீவுகளை கண்டுபிடித்ததால் தான் ஐரோப்பாவைச் சேர்ந்த பல்வேறு நாட்டினரும் அமெரிக்காவுக்குச் சென்று குடியேற வழி ஏற்பட்டது.

இத்தாலியைச் சேர்ந்தவரான கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1452 இல் பிறந்தார். சிறிய வயதிலேயே கடல் பயணங்களை மேற்கொண்டார். அக் காலத்தில் இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் பரவியிருந்தது. கடலில் மேற்க்கு திசையில் பயணம் செய்து இந்தியாவை அடைய முடியும் என்று கொலம்பஸ் நினைத்தார். தன்னுடைய கடல் பயணத்துக்கு உதவும் படி ஸ்பெயின் நாட்டு அரசரையும் அரசியையும் கொலம்பஸ் கேட்டுக்கொண்டார். அவர்களும் கோலம்பசுக்கு உதவ முன்வந்தனர்.

1492 ஓகஸ்ட் 3 ஆம் திகதி கொலம்பஸ் தனது கடல் பயணத்தை தொடங்கினார். நினா, பின்டா, சாந்தமரியா என்ற மூன்று கப்பல்களில் ஸ்பெயின் நாட்டின் தென் கிழக்கே உள்ள பாலஸ் என்ற துறைமுகத்தில் இருந்து கொலம்பசும் மற்றும் 120 மாலுமிகளும் புறப்பட்டார்கள். இந்த மூன்று கப்பல்களும் அட்லாண்டிக் பெருங்கடலில் மேற்கு நோக்கி பயணித்தன. இவ்வாறு புறப்பட்டு சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் சில தீவுகளை கண்டார். இவற்றில் ஒன்று “ஜீவானா”என்ற தீவு. தற்போது கியூபா என்ற பெயரில் இத்தீவு அழைக்கப்படுகிறது. தீவில் இறங்கிய கொலம்பஸ் அந்த தீவைச் சுற்றி பார்த்தார். ஸ்பெயின் நாட்டின் நிதி மந்திரிக்கு தன் அனுபவங்களை பற்றி ஒரு கடிதம் எழுதினார்.

நீண்ட கடிதத்தின் முக்கிய பகுதிகளாவன.

“ஸ்பெயின் நாட்டில் இருந்து புறப்பட்ட 33 வது நாள் சில தீவுகளை கண்டேன். அந்தத் தீவில் மக்கள் வசிக்கின்றார்கள். இந்தத் தீவுகள் நம் மன்னருக்கு சொந்தமாகி விட்டதாக பிரகடனம் வெளியிட்டேன். நம் தேசக் கொடியையும் பறக்கவிட்டேன். இத் தீவுகளில் ஒன்று ஜீவானா. அதன் கடற்கரை ஓரமாக மேற்கு நோக்கிச் சிறிது தூரம் சென்றேன். செல்லச் செல்ல அது எங்கே போய் முடிகிறது என்று தெரிய வில்லை. அவ்வளவு பெரிய தீவு. இது சிறிய தீவாக இருக்க முடியாதென்றும், மிகப் பெரிய சீனதேசமாக இருக்க வேண்டும் என்று கருதிகிறேன்”.

இங்கு அகன்ற துறைமுகங்கள் பல இருக்கின்றன. பெரிய நதிகள் ஓடுகின்றன. உயர்ந்த மலைகள் காணப்படுகின்றன. விதம் விதமான தென்னை மரங்களை கண்டேன். இவற்றின் உயரத்தையும் அழகையும் என்ன வென்று கூறுவது. இந்தத் தீவில் ஏலம், கிராம்பு போன்ற வாசனை பொருட்களும், தங்கம் போன்ற உலோகங்களும் கிடைக்கின்றன. இந்தத் தீவில் ஆண்களும் பெண்களும் பிறந்த கோலத்தில் நடமாடுகின்றனர். சில பெண்கள் மட்டும் இலை சிறிய துணி முதலியவற்றை உடைகள் போல் அணிகின்றார்கள். எங்களைப் பார்த்ததும் பயந்து ஓட்டம் பிடிக்கின்றார்கள். ஆண்களால் தங்களுக்கு ஆபத்து இல்லை என்ற தெரிந்த பிறகு சாந்தமான சுபாவத்துடன் நடந்து கொள்கின்றார்கள்.

நாங்கள் ஒரு சாதாரணப் பொருளைக் கொடுத்தாலும் அதை வாங்கிக் கொண்டு தங்களிடம் உள்ள மதிப்பு வாய்ந்த பொருட்களை கொடுத்து விடுகிறார்கள். எனவே கண்ணாடிகள், தட்டுக்கள், சாவி வளையங்கள் போன்ற சாதாரண பொருட்களை இவர்களிடம் கொடுத்து ஏமாற்றக்கூடாது என்று நம் ஆட்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றேன். தீவில் வசிக்கும் ஒவ்வொரு ஆணும் ஒரே மனைவியுடன் திருப்தி அடைகிறார்கள். அரச குடும்பத்தினர் மட்டும் 20 மனைவிகள் வரை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதாக அறிகிறேன். இவ்வாறு கொலம்பஸ் தன கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கொலம்பஸ் மொத்தமாக நான்கு கடல் பயணங்கள் மேற்கொண்டார். இரண்டாவது கடல் பயணத்தின் போது 1493 செப்டெம்பர் மேற்கிந்திய தீவுகளை கண்டு பிடித்தார். 1498 இல் மூன்றாவது கடல் பயணத்தை மேற்கொண்டு ஹெய்டி தீவுக்கு சென்ற போது, அத் தீவின் ஆளுநருடன் தகராறு ஏற்பட்டது. அவர் கொலம்பசுக்கு கைவிலங்கு போட்டு ஸ்பெயின் நாட்டுக்கு அனுப்பிவைத்தார். கொலம்பஸ் மீது அன்பு கொண்டிருந்த ஸ்பெயின் அரசனும் அரசியும் அவரை விடுவித்து நான்காவது கடல் பயணத்துக்கு ஏற்பாடு செய்துகொடுத்தனர். இந்த நான்காவது கடல் பயணத்தின் போது மெக்சிகோ வளைகுடாவை கொலம்பஸ் கண்டுபிடித்தார்.

1504 ஆம் ஆண்டில் தனது நான்காவது கடல் பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பெயின் நாட்டிக்கு திரும்பிய கொலம்பஸ் நோய்வாய்ப்பட்டார் . ஸ்பெயின் அரசர் கொடுத்த வாக்குறுதியின் படி அவருக்கு உதவி செய்யவில்லை. அதனால் கொலம்பஸ் வறுமையில் வாடி 1506 ஆம் ஆண்டு மே 20 ஆம் திகதி தனது 55 ஆவது வயதில் காலமானார்.

கொலம்பஸ் தனது கடல் பயணத்தின் போது மூன்று கப்பல்களுடன் சென்றார். அவற்றில் சந்தமரியா என்ற கப்பல் உடைந்து கடலில் மூழ்கியது. 1492 இல் கடலில் மூழ்கிய இக் கப்பல் 476 ஆண்டுகளுக்கு பின் 1968 இல் கடல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

0 கருத்துகள்: